Sunday, August 7, 2016

சிவமயம்
பழைய வடமொழி நூல்களில் சிவபெருமானின் முழுமுதன்மை

 [சிவஞான பூஜா மலர்துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
      வடமொழியில் பழைய நூல்களென்று அம்மொழி நூல்களை நன்காரய்ந்து உணர்ந்த மாபெரும் புலவோர் கொண்டவை பின்வருவனவேயாகும். புராணங்களுள் மிகப்பழைமையானவைமற்சபுராணம்’ ‘வாயுபுராணம்என்பவைகளேயாம். சிவபிரான்றன் முழுமுதற்றன்மைகளை இவையிரண்டும் விரித்துரைக்கின்றன. மற்சபுராணத்தில் சிவபிரான் முப்புரங்களையும் காமவேளையும் நெற்றிக் கண்ணால் எரித்தமையும், கார்த்திகேயன் பிறப்பும், தாரகாசுரனை அழித்தமையும் பிறவுமாகிய வரலாறுகள் சொல்லப்படுகின்றன. வாய்புராணத்தில் தக்கன் வேள்வி அழிப்புண்டமையும், யோகஞ்செய்தலால் வருஞ் சிறந்தபயனும், யோகியின் சிவபிரான் திருவருட்பேற்றினை அடைதலும். சிவபுரத்தின் மாட்சியும் விரித்துரைக்கப்படுகின்றன. இவற்றிற்குப்பின் தோனறிய ‘அக்னி புராணம்’ ‘இலிங்க புராணம்’, ‘ஸ்காந்த புராணம்’, ‘வாமன புராணம்’, ‘கூர்ம புராணம்’, ‘தேவீபாகவதம்’, ‘பிரம்மாண்ட புராணம்’, ‘மார்க்கண்டேய புராணம்’, ‘பவிஷ்யோத்தர புராணம்’, முதலியனவும் சிவபிரானின் முழுமுதற்றன்மைகளையும் உமைப்பிராட்டியாரின் மாட்சிகளையுமே எடுத்துப் புகலுகின்றன. இவையல்லாத வைணவ புராணங்கள் எல்லாம் கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டனவாகும். வைணவபுராணங்களில் முற்பட்டதாகிய ‘விஷ்ணு புராணமே’ கி. பி. 1045 ஆம் ஆண்டில் இயற்றப்ட்டதாகும் என்று அதனை நன்கு ஆய்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ‘உவில்சன்’ என்பவர் கூறியுள்ளா. (H. H, Wilson’s Puranas p. 120). எனவே ஏனைய வைணவபுராணங்கள் எல்லாம் வைணவம் சைவசமயத்துக்கு மாறாய்த் தோன்றி அதனைப் பழிக்கத் துவங்கியபின் வைணவப்புலவோரால் புதியவாய்ப் புனைந்து கட்டப்பட்டனவேயாதல் தெள்ளிதற் புலனாம். உதாரணமாக ‘வைணவபாகவதம்’ தேவகிரி அரசன் மகாதேவற்கும் அவற்குப்பின் வந்த இராமதேவற்கும் அமைச்சனான ஹேமாத்திரியின் அவையிலிருந்த போப தேவரால் அறுநூற்றைம்பது ஆண்டுகட்டுமுன் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது. இங்ஙனமே நாரதம் முதலிய மற்றைய வைணவபுராணங்களும் கி. பி, பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே புனைந்துவைக்கப்பட்டன. பழைய பதினெண்புராணங்களிற் சேர்ந்த சிலவற்றின் பெயர்களையே புனைந்து கட்டிவிட்டமையால் ஆராய்ந்து பாதர்க்கும் ஆற்றல் இல்லாதார் இவ்வைணவ புராணங்களைப் பழைய பதினெண் புராணஙகளிற் சேர்ந்தனவாகப் பிறழக்கொண்டு மயங்கிப் பெரிதும் இடர்படுவர். உண்மையான் நோக்குவாரெல்லாம் இவை கி. பி. பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் பழைமையைப் பலவாறு திரித்துப் புதுப்பொய் பல புகுத்திச் செய்யப்பட்டனவாதலை நன்கு உணராநிற்பர். (See H. H. Wilson’s Puranas and R. C. Dutt’s A History of Civilization in Ancient India, Vol. II pp. 203-211).
      இவ்வைணவ புராணங்களுக்கு முற்பட்டனவாக மேலெடுத்துக்காட்டிய மற்சம், வாயு, இலிங்கம், காந்தம், தேவீபாகவதம் போன்றவைகளெல்லாம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையில் ஆக்கப்பட்ட பழையகாலத்துப் புராணங்களாய்ச் சிவபிரான் அருட்டிறங்களையும் அம்மையின் அருட்செயல்களையும் எடுத்துரைத்து அவரே முழுமுதற் கடவுளாதலை வலியுறுத்துகின்றன. இவைகளுள் விஷ்ணுவை முதற்கடவுளாக உயர்த்திச் சிவத்தை இழிக்கும் பகுதி ஓர் எட்டுணையும் காணப்படமாட்டாது. அதனாற் சைவசமயாசிரியர் காலத்தும் அவர்க்கு முன்னே கி.பி. முதல் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தும் சிவபிரானும் அம்மையுமே எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாக வணங்கப்பட்டமை தெளிவாக விளங்கும்.
      புராணங்களுக்கு முற்பட்ட பழைமையுடையது வால்மீகி இராமயணம் ஆகும். இந்நூலின் பழைய பகுதிகளில் இராமன் திருமாலின் பிறப்பாகக் கொள்ளப்படாமல் அவன் ஆண்மையிற் சிறந்த ஓர் அரசனாகவே உரைக்கப்பட்டுளன். ஆனால் இவ்விராமயணத்திலேயே பல இடங்களிலும் தேவர்கள் சிவபிரானையும் உமைப்பிராட்டியையும் வழிபட்டுப் பேறு பெற்ற வரலாறுகள் பல சொல்லபடுகின்றன. பாலகாண்டம் 27 ஆம் இயலில், தேவர்கள் அனைவருஞ்சென்று சிவபிரானையும் அம்மையையும் வழிபட்டுக் கார்த்திகேயனை (முருகனை)ப்பெற்று, அவனைத் தம் படைத் தலைவனாக அமைத்துக் கொண்டமை நுவலப்பட்டிருக்கின்றது. அதன் 42 ஆம் இயலில் பகீரதன் கங்கையை வானுலகத்திலிருந்து மண்ணுலகத்துக்குக் கொணரும்பொருட்டு நான்முகனை வேண்டிப் பெருந்தவம் புரிந்தகாலையில், அக்கடவுள் அவன் முந்தோன்றிக் கங்கையின் ஆற்றலைத் தாங்கி அதனை நிலத்து உய்க்கவல்லான் சிவபிரான் ஒருவனே யாதலால் அப்பெருமானை நோக்கி அது வேண்டித் தவம் புரியக்கடவாய் என ஏவி மறைந்தமையும் 44 ஆம் இயலில் அங்ஙனமே பகீரதன் சிவபிரானை நோக்கிப் கடுந்தவம்புரிய அப்பெருமான் அவனது தவத்துக்கு இரங்கி அவன் வேண்டியபடியே கங்கையைத் தனது சடைக்கண் தாங்கி நிலத்து உய்த்தமையும் கூறப்பட்டிருக்கின்றன. இஃது இங்ஙணமாகவும், பிற்காலத்து வைணவப்புலவர்கள், விஷ்ணுவின் அடிகளிலிருந்து விழுந்த கங்கையைச் சிவபிரான் தாங்கினார் என இராமாயணத்தில் காணப்படாததொரு செய்தியினைப் புதிது படைத்துத் தாம் புனைகந்த புராணங்களில் நுழைப்பாரயினர். விஷ்ணுவே தம் அடிகளில் கங்கையைத்தாங்கி விட வல்லுநராயின், அவரை நோக்கியே தவம்புரியுமாறு நான்முகக் கடவுள் பகீரதனை ஏகவியிருக்கலாமன்றோ? அது தாங்கவல்லார் சிவபிரானே என நான்முகன் மொழிந்ததும் அம்மொழிப்படியே பகீரதன் தவம் புரிந்ததும், சிவபிரான் அவன் குறை முடித்ததும் பண்டுதொட்டு உலகம் அறிந்த உண்மைகளாகலின் இவற்றைத் தம் புளுகுரைகளால் மறைக்கமுயலும் பிற்காலத்து வைணவர் முயற்சி சிறிதும் நிறைவேறாது.
      நிற்க, விஷ்ணுபாதத்தினின்று கங்கை கீழ் இழிந்தாள் என வைணவர் கதை கட்டிச் சொல்லுதற்குத்தான் யாங்ஙனம் இடம் பெற்றார் எனின், இருக்குவேத காலத்தில் ‘விஷ்ணு’ என்னும் சொல் பகலவனுக்கே ஒரு பெயராக வழங்கிற்று. (See Dr. A.A. Macdonell’s ‘A History of Sanskrit Literature’ P.80). பகலவன் செல்லும் வழி வான் வெளியேயாகலின் அவ்வான்வெளி ‘விஷ்ணுவின் பாதம்’ எனப் பெயர் பெறுவதாயிற்று. ‘பதம்’ ‘பாதம்’ என்னும் வடசொற்கள் ‘அடி’ அல்;அது ‘அடிச்சுவடு தோய்ந்த இடம்’ எனப் பொருள் தரும். நிலத்தின் கண் உள்ள நீர் ஆவியாக மாறி மேலெழுந்து வானத்தின்கன் வைகுதலால் கங்கை வானுலகத்தின்கண் உளள் என ஆன்றோர் உருவகப்படுத்திக் கூறினர். வான்வெளி விஷ்ணுபாதம் எனவும் வானத்தினின்று மழையாக இறங்கும் நீர் கங்கை எனவும் பெயர் பெற்றமையால், இயற்கையில் நிகழும் இந்நிகழ்ச்சியைக் கொண்டு ‘விஷ்ணுவின் அடியிலிருந்ஹு கங்கை கீழ் இழிந்தாள்’ எனக் கதைகட்டி அம்முகத்தால் அக்கங்கை நீரைச் சடையில் ஏற்ற சிவபிரானை வைணவர் பழித்துரைத்து மகிழ்ந்தனர்.
      இன்னும், பாலகாண்டம், 45 ஆம் இயலில் தேவர்களும் தைத்தியர்களும் சாவாமருந்தாகிய அமிர்தம் பெறும் பொருட்டு ஒருங்குகூடிச் சென்று திருப்பாற்கடலைக் கடைய அதன் கண் வாசுகி உகுத்த நஞ்சு பெருகி அங்கே குழுமிய தேவர்கள் முதல் அனைவரையும் அழிக்கப்புக்கமை கண்டு, அவர்களெல்லோரும் பெரிதும் நடுக்குற்றுச் சிவபிரானை அடைக்கலம் புகுந்து “எல்லாம்வல்ல பெருமானே எம்மைப் பாதுகாத்தருள்க, எம்மைப் பாதுகாத்தருள்க!” என்று குறையிரந்தமையும், அங்ஙனமே விஷ்ணுவும் சிவபிரானை நோக்கித்* “தேவரீரே எல்லாத் தேவர்கட்கும் முன் உள்வீர், நீரே எல்லாத் தேவருள்ளும் சிறந்த தலைவராயினீர். ஆதலால், எல்லார்க்கும் வருவதில் முதற்பங்கு தேவரீரையே சாரற்பாலதாகலின், பெருமானே முதற்கண் வந்ததாகிய இந்நஞ்சினைப் பருகியருளும்” என வேண்டினமையும், அவ்விருதிறத்தார் கலக்கத்தையுங் கண்டு இரங்கிச் சிவபிரான் அந்நஞ்சினையே அமிந்தமாகப் பருகி அதனால் தான் ஏதுந்துன்புறாது தேவர் துயர் களைந்தருளினமையும் நன்கெடுத்துச் சொல்லப் பட்டிருக்கின்றன.
      [* விஷ்ணு சிவபிரானை வேண்டிய இவ்வுரை வடமொழியிற் பின்வருமாறு உளது. “தைவதைர் மத்யமாநே துயத்பூர்வம் ஸமுபஸ்திதம், தத்த்வதீயம் ஸுரச்ரேஷ்ட ஸுராணாம் அக்ரதோ ஹி யத், அக்ரபூஜாம் இஹ ஸ்தித்வாக்ருஹாணேதம் விஷம் ப்ரபோ.” – வாலிமீகி இராமயணம், பாலகாண்டம், 45 ஆம் சருக்கம், ச்லோகம் 23-24.]
      இன்னும், அதன் 66 ஆம் இயலில், தக்கன் வேட்ட வேள்விக்கண் கூடிய தேவர்களெல்லாரும் தம்மைப் பெரியராகக் கருதி இறுமாந்து முதலிற் சிவபிரானுக்குச் சேர்ப்பிக்கற்பாலதாகிய அவியுணவினைச் சேர்ப்பியாதுவிட, அவர்களது இறுமாப்பை ஒழித்துத் தனது முதற்கடவுள் தன்மை காட்டி அவர்க்கு நல்லறிவு கொளுத்துதல் வேண்டிச் சிவபிரான் அவர்களைத் தலையறுத்தும், உடலங்களைப் பிளந்தும், உறுப்புக்களை வெட்டியும் ஒட்டித் தானே வெற்றி முதலவனாகத் திகழ்ந்து நிற்பப், பின்னர் அத்தேவர்கள் எல்லோரும் நல்லறிவு பெற்றுத் தமது சிறுமையும் எல்லாம் வல்ல அப்பெருமானின் பெருமையும் உணர்ந்து அவனை வழுத்த, அப்பெருமான் அவர்க்கிரங்கி மீண்டும் அவர்தம் உடலங்களையும் பழுதுபட்ட உறுப்புக்களையும் சீர்  திருத்திக் கொடுத்தருளினமையும் நன்கு விளக்கப்பட்டு உள்ளது.
      மற்றொரு இதிஹாஸமான மாபாரதப் பழம்பகுதிகளிலும் சிவபிரான் தன் முழுமுதற்றன்மையும் அவன் தன்னை வேண்டிக் குறையிரந்த அடியார்க்கு அக்குறை முடித்தமையும் பலவிடங்களிற் சொல்லப்பட்டிருக்கின்றன. இப்பகுதிகளிலுன்கூட இடையிடையே விஷ்ணுவையுங் கண்ணனையும் உயர்த்து உரைக்கும் கதைகள் சிலவற்றை வைணவர்கள் நுழைத்தனராயினும், அவர் நுழைத்த அக்கதைகள் பாரதத்திற்கும் மிக முற்பட்ட பிராமணங்களிலும் வேத நூல்களிலும் காணப்படாமையானும், மற்றுச் சிவபிரானுடைய இறைமைத் தன்மையை நாட்டுங் கதைகளே மிகப்பழைய அந்நூல்களிலெல்லாம் காணப்படுதலானும் விஷ்ணுவையும், கண்ணன் இராமனையும் உயர்த்த முனைந்த கதைகள் பிறகாலத்துப் போந்த வைணவர்களால் புதிது புனைந்து புகுத்தப்பட்டனவாதல் தேற்றமாம்.
      [பதிப்பாசிரியர் குறிப்பு: தவத்திரு மறைமலை அடிகளாரின் “மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்” (கழக வெளியீடு) என்ற நூலின் இரண்டாம் பகுதி 19-வது அத்தியாயத்தினின்றும் தொகுக்கப்பட்டது].


Friday, August 5, 2016

சிவமயம்
பேராசிரியர் திரு. பெ.கு. வரதராசன் அவர்கள் பாடிய
சிவபெருமான் புகழ்மாலை ஒரு கண்ணோட்டம்

புலவர் மு. கங்காதரன் எம்.., பி.டி

[சிவஞான பூஜா மலர்துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
பாயிரம்:
      ‘சிவபெருமான் புகழ் மாலைஎன்னும் இப்பக்தி சிறு நூல் மணத்தால் சீரிய நூல். ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்என்பது இந்நூற்கும் பொருந்தும் தொடரே. இது வாழ்த்துப் பகுதி, நூற்பகுதி என இருபகுதியைக் கொண்டு முன்னதற்கு ஆறுபாடலும், பின்னதற்கு முப்பது பாடலுமாக முப்பத்தாறு வெண்பா மலர்களைக் கொண்டு மணம் வீசுகிறது. இந்நூல் முகப்பில் நேரிசை அகவலால் பாடப்பெற்று நூலாசிரியரின் முன்னுரை ஒன்று இணைக்கப் பெற்றுள்ளது. இதன் ஆசிரியர்நன்னயம்சால் பண்புடையான், அன்புமிக்கான், நல்வயிரக் காவியங்கள் தோயுமநாவான், பன்னரிய தமிழ் வளர்க்கும் ஆசான், செவ்விபயில்வரதராசன்எனும் கவிஞர்ஆவார். இது நாளும் சைவ மணம் பரப்பும் பொத்தனூர் திருமுறை மன்ற வெளியீடாக வந்துள்ளது. அம்மன்றத்தின் பதினோராவது ஆண்டுவிழா நிகழ்ச்சி சைவ சமயத்தாரால் கோயில் என வழங்கப் பெறும் சிதம்பரத்தில் நடந்தபோது வெளியிடப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் உள்ளக்கிடக்கை:
                பருப் பொருட்டாகிய பாயிரங் கேட்டார்க்கு
       நுண் பொருட்டாகிய நூலினது விளங்கும்

என்ற முன்னையோர் கொள்கைப்படி நூற்பொருள் உணர்தற்கு முன்னர் நூலாசிரியரே வழங்கும் முன்னுரையில் காணப்பெறும் செய்தியை உணர்ந்து கோடல் நலம் செய்யும் என்பது ஒருதலை.
      ‘மலர்கள் மலர்ந்தால் இறைவன் முடித்தலத்தைச் சார வேண்டும். இன்றேல் வண்டு துய்த்தற்காகவேனும் மலர்தல் வேண்டும். அதுவுமின்றேல் பிறர்சூட்டிக் கொள்ளும்படியாக எண்ணத்தைத் தூண்டிச் சூட்டப்பெற்று இசைபட வாழவேண்டும். யாவராலும் காணப்படாத நிலையில் புதரின் இடுக்குகளில் இருப்பினும் மணமேனும் பரப்புதல் வேண்டும்என ஒட்டுவகையான மனிதவாழ்வு அமைய வேண்டிய முறையைச் சுட்டிக்காட்டிச் செல்வது பிறந்ததன் பயன் எவ்வகையிலேனும் பிறர்க்குப் பயன்பட வாழ்வதே என்பதைத் தெளிவாக்குகிறது இந்நூலின் பாயிரம்.
நூல்: யாப்பமைதி:
      தலைமாலை கொண்ட சிவபிரானார்க்கு அடியார்கள் பலரும் சொன்மாலை சூட்டி வழிபட்டனர். அவை எண்ணிறந்த தேவாரமாக, மும்மணி மாலையாகம் இரட்டைமணி மாலையாக மேலும் பிறவாகப் பொலிந்தன. ஆசிரியரும் அடியார் வழி நின்று கருத்தலங்கலைச் சூட்டுவதை,
                மனத்தில் தோன்றிய மலர்ப்பறித்து அவற்றைச்
       சிவபெருமான் புகழ்மாலை யான செய்தேன்.’
               
என்னும் முன்னுரையாக நின்ற அகவல் அடிகளால் உணர்கின்றோம். கருத்து மணம் மிக்க முப்பது வெண்பா மலர்களை இறையன்பு என்னும் நார்கொண்டு பிணைக்கப் பெற்றிருப்பது இம்மாலை நூல்.
வெண்பா யாப்பு பத்தினித்தன்மை வாய்ந்தது. செப்பலோசையும் சங்கராபரணப் பண்ணும் தனக்கெனக் கொண்ட இவ்யாப்பில், சீரிய கருத்துக்களைச் செப்பவும், சங்கரன் புகழைக் கூறவும் ஆசிரியர் மேற்கொண்டது பொருத்தமானதே. வாழ்த்துப்பகுதி, நூற்பகுதி என்னும் இரண்டு பகுதிகளிலும் உள்ள வெண்பா மலர்கள் எண்ணிக்கை முப்பத்தாறு. இவற்றுள் இரண்டு வெண்பாக்களே இன எதுகையை நோக்கிப் பார்க்கும்போது ஒருவிகற்பத்தால் வந்த ஆசிடையிட்ட நேரிசைவெண்பாக்களாக அமைந்துள்ளன. ஏனைய முப்பத்து நான்கு வெண்பாக்களும் இருவிகற்பத்தான் வந்த ஆசிடையிட்ட நேரிசை வெண்பாக்களாகக் காணப்படுகின்றன. இவையனைத்தும் இயற்சீர்வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் விரவி வந்த ஒழுகிசைச் செப்பலோசையே பெற்று வருகின்றன.
சிவாய நமவென்னும் சீர்சொல்லி வாழ்வ
துவாயமெப் போது முனககு

      எனவரும் (நூற்பகுதி-4) ஓரிடத்தில் மட்டும் எதுகை நோக்கிய விகாரத்தைக் காண்கிறோம். நல் என்னும் நிலைமொழியுடன் உயிர்முதலாகிய இடம் என்னும் வருமொழி இணையும் போழ்து. ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்என்னும் விதிப்படி நல்லிடத்தை எனப் புணர்தல் வேண்டும். ஆனால்,
                உன்னிடத்தில் கூறி யிரப்பதற் கொன்றுண்டாம்
       நன்னிடத்தை யேநாடும் நாயகனே
               
என்னும் ஓரிடத்தில் மட்டும்நீணுலகம்என அப்பர் பெருமான் ஆண்டது போல எதுகை நோக்கிய விகாரமாக வந்துள்ளது. மேலும் இணைக்குறள் நேரிசை வெண்பாவோ, இன்னிசை வெண்பாவோ இதன்கண் இடம் பெற்றில். இந்நூலில் பலவகையான முரண்தொடைகள் அமைந்திருப்பதையுங் காணலாம். இதற்கு யாப்பமைதியோடு நடக்கின்றது இந்நூல்.
வாழ்த்துப் பகுதி:
      இந்நூலின் வாழ்த்துப் பகுதி கணபதி துதி (1), அவையடக்கம் (1), மூவரது பெருமையும் நினைவும் (1), திருமுறைகளும் பயனும் (2) என்னும் ஐஞ்சிறு தலைப்புகளுடன் ஆறு பாடல்கள் கொண்டு அமைந்துள்ளது.
வாழ்த்துப் பகுதி: கணபதி துதி
      பிடியதன் உரு உமை கொளமிகு கரியது என்னும் தேவாரத்தில் விநாயகர் பிறப்பு காணப்படுகின்றது. கணபதியைப் பற்றி வழங்கும் கதைகளில் ஒன்று. அவரை வழிபடாது சென்ற சிவனது தேர் இற்ற நிகழ்ச்சியாகும். இதனைஅச்சிவன் உறை ரதம் அச்சது பொடிசெய்தஅதிதீராஎனும் தொடர்களில் அருணகிரியார் குறிக்கின்றார். இலக்கண உரையாசிரியர்களுள் ஒருவரான சேனாவரையரும்,
                தன்தோள் நான்கின் ஒன்று கைம்மிகஉம்
       களிறுவளர் பெருங் காடாயினும்
       ஒளிபெரிது சிறந்தன் றளிய என்நெஞ்சே

எனக் கணபதி துதியை அமைக்கின்றார்.
                திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாகிய சிவனார் முதல் சங்கத்துத் தலைமைப் புலவர். களவியல் என்னும் பெயரில் அறுபது நூற்பாக்கள் யாத்தவர். ‘கொங்கு தேர் வாழ்க்கைஎனும் சங்கப் பாடலை இயற்றியவர். ‘மதிமலிபுரிசைஎனும் சீட்டுக்கவியுந் தந்தவர். குமரக் கடவுள் சங்கப்புலவராக இருந்தவர். களவியல் உரைக்கும் காரணிகளாக நின்று மெய்யுரை கூறிய உருத்திரசன்மர். அகத்தியனுக்குத் தமிழ் உணர்த்தியவர். விநாயகரோஎனின், ‘முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதலோன்எனப் பெறுபவர். மூவருமே எழுதுதல், மெய்யுரை காணல் முதலியவற்றில் சிறந்த்வர்கள், தமிழோடு தொடர்பு பூண்டவர்கள். இம்மூவருள், இந்நூல் சிறக்க அருளும்படி சிவனை வேண்டியழைப்பது முறையன்று என்னை? சிவன் மீது பாடப்படும் தமிழுக்கு அவனே துணை நிற்றலாகாது என்பதனாலாம். குமரனோவெனில், அவன் இளையன் முன்னுரிமை குடும்பத்தில் மூத்தவர்க்கே தரல் இயல்பு என்பது பற்றிக் கணபதியைக் காக்கும்படி புலவர் துதிபாடினர் போலும். மேலும், எழுதுதலாகிய தன்வினைக்கு ஏடும் எழுத்தாணியும் எடுத்தவனையே துணையாக அழைத்தனர் எனலுமாம். அது பற்றியே இந்நூலாசிரியரும் கணபதி துதியை அமைத்துஅலகில் பெருமை புனையப் பிழை நலிய வருக களிறே மகிழ்ந்துஎன வேண்டி வணங்குகின்றார்.
      ‘ஓம்என்ற பிரணவத்தின் இடைப்பட்ட எழுத்தாகிய உகரம் மங்கல எழுத்தாகலின் பொருத்தம் பற்றி முதற் கண் உகரத்தில் இந்நூல் தொடங்கப் பெறுகின்றது. அன்றியும், ஓங்கார வடிவினனாகக் காட்சிதரும் கணபதியின் துதியாகலின், அதனுள் ஒன்றாகிய காத்தல் பொருண்மையை உணர்த்தும் உகரத்தை முதற்கண் பெய்தமைத்தார் எனலாம். மற்றும் முன்னைப் பெரியோர்கள் எல்லோரும்உலகம்எனும் சொல்லை முன்னர் வைத்துத் தங்கள் நூல்களைத் தொடங்கினார்களாதல் பற்றி இந்நூலாசிரியர்உலகம்எனத்தொடங்கினார் என்பது பொருந்துவதே. சிறப்பாகத் தென்னாட்டார்க்கும் பொதுவாக உலகர்க்கும் உரியன் இறைவன் என்பது கருதி
                தென்னாடுடைய சிவனே போற்றி
       எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

என்றுரைத்த மாணிக்கவாசகரைப் பின்பற்றிஉலக முதல்வன்எனத் தொடங்கினார் நம் ஆசிரியர் என்பதும் ஒன்று இங்ஙனம் கணபதி துதியைத் தொடங்கியவர்முதல்வன் இருதாள் நிலவும் மனத்தில் பெருமைபுனையப் பிழைகள் நலிய களிறே வருக மகிழ்ந்து நிறைகஎன முடிக்கின்றார்.
வாழ்த்துப் பகுதி அவையடக்கம்
      அவையடக்கப்பகுதிபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்என்னும் பழமொழியுடன் தொடங்குகின்றது. பொன்மலையைச் சார்ந்த பொல்லாக் கருங்காக்கையும் பொன்னிறம் பெறும் என்னும் காரிகை ஆசிரியரின் வழி நின்றுபூவொடு சேர்ந்த நாரும் மணம் பெறும், காவொடு சேர்ந்த புன்மலரும் மேன்மையுறும், நீசன் என் பாடலும் இறைவன் புகழொடு சேர்தலால், தகுதியுறும், அவ்வழியே யானும் தகுதியுறுவேன்என மொழிவது நினைத்து மகிழ்தற்குரியது.

வாழ்த்துப்பகுதி சமயக் குரவர் துதி
      காஞ்சிபுராணத்தில் சைவசமயக் குரவர் நால்வர் வணக்கத்தை வைத்தாற்போல இவ்வாசிரியரும் நால்வர்க்கும் வாழ்த்தமைக்கின்றார். இவர் தம் மனத்தில் மனைவியர் இருவருடன் இன்றைவாழ்க்கையை மேற்கொண்டொழுகிய சுந்தரரே முதற்கண் நிற்கின்றார். இரண்டாவதாகத் திருமனமேற்ற திருஞானசம்பந்தரும் மூன்றாவதாகத் மணமேற்காத அப்பர் பெருமானும் நிற்கின்றனர். காரணம், ‘பிறவிப்பெருங்கடல் நீந்த விரும்புவோர் துறவித்துயர் தாங்க வேண்டா, இல்லறத்தில் இருந்து வாழ்ந்து துயர் போக்குந் திருமுறைகளை ஓதினால் போதும்என்னும் கருத்தினர் ஆதலின் என்று கொள்ளலாம். திருநாவுக்கரசரும்காதல் மடப்பிடியோடும் களிறு களித்து வருவன கண்டேன்எனத் திருவையாற்றுத் திருப்பதிகத்தில் இல்லறத்தைச் சிறப்பிப்பான் போன்றே பாடியுள்ளமை உன்னத்தக்கது மேலும்,
                காமம் சான்ற கடைக்கோட் காலை
       ஏமம் சான்ற மக்களோடு துவன்றி
       அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
       சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
                                                (தொல்காப்பியம்)

என முன்னையோர் மொழிந்த இலக்கணம் இவ்வாசிரியரை இங்ஙனம் கருதச் செய்து போலும். திருவள்ளுவரும் இல்லறவியலின் பின்னரே துறவியல் வைத்தமை இக்கருத்தை உட்கொண்டோ எனக் கருத வேண்டியுளது.
      வான் கலந்த மாணிக்கவாசகர் தேன் கலந்த திருவாசகத்தைத் தந்து, ‘அழுதால் உன்னைப் பெறலாம்என மொழிந்த வாசகம் இறைவனை அடைவதற்குரிய எளிய சாதனத்தைக் குறிப்பதாகின்றது. ‘அழுத பிள்ளை பால் குடிக்கும்எனும் பழமொழியைப் பலகாலும் கேட்டவராகலின் கழுவாய் அறிந்த மகிழ்ச்சியில்உனதாள் கூட்டி விட்டேன் நெஞ்சில் குறித்துஎனக் குறிக்கின்றார்.
வாழ்த்துப்பகுதி: திருமுறையும் பயனும்
      திருமுறை நூல்களை எண்ணுமுகத்தான் அவ்வந்நூல்களுக்கு உரிய ஆசிரியர்களையும் நினைவுகூர்ந்து துதிப்பதாய்க் கருத வேண்டியுளது. காரணம், வாழ்த்துப் பகுதி என்பதால், திருமுறைகள் ஓதில் இல்லறத்தானும் பிறவிக் கடலைக் கடக்கலாம், மரணமிலாப் பெருவாழ்வு எய்தத் துறவித்துயர் தாங்க வேண்டா எனும் முகத்தால்அறம், பொருள், இன்பம், வீட்டைதல் நூற்பயனேஎன்பதைக் குறித்தாராயிற்று.
நூற்பகுதி:
      இப்பகுதி முப்பது பாடல்களைத் தன்னகத்தே கொண்டு மிளிர்கின்றது. பதினேழு சிறுதலைப்புகளைக் கொண்டுள்ளது (தலைப்புகளின் விவரங்களை இம்மலரில் வேறு இடத்தில் அச்சாயிருக்கும் நூற்பகுதியில் காண்க). இப்பதினேழு தலைப்புக்களில் கழிந்ததற்கு இரங்குவதாக அமைந்துள்ளஉண்மையறியாது உயர்விழ்ந்தேன்எனும் தலைப்பே நான்கு பாடல்களைப் பெறுகின்றது. இதனையடுத்து மூன்று பாடல்களைப் பெறுவதுநெஞ்சிற்கறிவுரையேஏழு தலைப்புகள் தலா ஒவ்வொரு பாடலும், எட்டுத் தலைப்புகள் இரண்டிடரண்டு பாடலும் பெற்று வருகின்றன. விளக்கங்கருதி இப்பதினேழு தலைப்புகளும் (1) சிவனார் சிறப்பும் பெயரும் (2) அவனை வணங்குக (3) அடியாரைச்சார்க (4) நெஞ்சிற்கறிவுரை (5) அடைந்தவர் பெறும் பேறு என்னும் ஐந்து அகத்தலைப்பும் (6) அணி என்னும் புறத்தலைப்பு ஒன்றுமாக ஆறு தலைப்புகள் தந்து நோக்குகிறது இக்கட்டுரை.
நூற்பகுதி: சிவனார் சிறப்பும் பெயரும்.
      சிவன் (7) வானவர் மகளிர் தம் காதோலையும் கடிசூத்திரமும் காக்க விடம் உண்ட கண்டன், ‘பித்தனோ மறையோய்என்ற மறையோனுக்கருள் புரிந்த பித்தன், அருளாளன், ஆண்டவன், ஆதி, குருநாதன், நன்றெல்லாம் ஒன்றானவன் (8) ஆண்டான், விஞ்சும் புகழ் சேர்ப்போன் (9) சீரழிந்து போவார்க்குந்துணை (10) கழுத்தில் கறுப்புடையான், கருணைபாலிப்பான், பொறுப்புடையான், (11) எண்ணி மகிழ்வோர்க்கு இதயம் களிக்கும் முக்கண்ணன், (12) பிழைகள் அனைத்தும் இறந்திடச் செய்வான் (13) பிழையை நலியச்செய்வான், விரும்பி ஆட்கொண்டான், (14) முருகன் தந்தை, பிழை போக்கும் நாதன், நடேசன் (15) நல்லிடத்தையே நாடும் நாயகன் (16) நாடினார்க்கு இன்பந் நயந்தருளால் நல்குவான், (17) தேடிவருவார்க்கும் வாரார்க்கும் வள்ளல் (18) வானகத்தில் மாமலையில் மண்மீது காணும் ஊனகத்துள் எல்லாமுளான் (20) கவலையெல்லாம் கூட்டோடே ஓட்டிடக்கண்ட ஒருவன் (21) செஞ்சடையான், தீக்கரத்தான், நிலா கங்கை அஞ்சல் என ஏற்ற அருளுடையான், தஞ்சம் என வந்தவரை ஏற்போன் (22) கங்கை சடை கொண்டான், கன்னி இடங்கொண்டான், எங்களிறை (23) இன்பங்கள் எல்லாம் பெறச் செய்வான், கண்ணுதலான், எந்தை, கருணை உள்ளான், (24) எனையாளும் ஈசன் (25) அன்புடையான், அருளுடையான், தவம் முன்புடையார்க்கு என்றும் முன்னிற்பான், என்னுடைய தாய் பாசமே கொண்ட பசுபதி (26) இடர்களைவான், உளத்தே தான் உறைவான் (27) வேத முதல்வன் அப்பன், என நாற்பத்தைந்து பெயர்களை இந்நூற்பகுதியின் அமைக்கப்பெற்றுச் சிறப்புகளைச் சுட்டுவதாகவும் விளங்கின்றன. பல கதைகளும் இத்தொடர்களின் உள்ளமைவதால் இறைவனின் அருள் செயல்களும் புலப்படுகின்றன. அவையெல்லாம் விரிக்கின் பெருகும். வாழ்த்துப்பகுதியில் உலகமுதல்வன், ஒருவன், ஈசன் எனும் முப்பெயர்கள் காணப்பெறுகின்றன. இவற்றையும் சுட்ட நாற்பத்தெட்டாதல் காணலாம்.
நூற்பகுதி: அவனை வணங்குக.
      சிவன் முருகனை ஈன்றவன். முருகனே தன் திறத்தால் தேவர்களை நீக்கியவன். மூவுலகும் மகிழ்பூக்கச் செய்தவன், சிந்திப்பவர் குறையைத் தீர்க்கதன் தெய்வானையுடன் செந்திற்பதி வாழ்பவன். குன்று தோறாடிக் குறையிரந்து கும்பிடுவார் என்றுமே இன்பம் பெறச் செய்பவன். குன்றுருவ வேள்வாங்கி நின்றவன். வேதமுதல்வன். இவற்றுள் தந்தைக்குப் புகழ் சேர்த்தவன். இத்தகைய மகனைப் பெறுவதே பேறு. எனவே, யாவர் இவனைப் போல் புகழ் வளர்க்கும் பிள்ளையைப் பெற்றார்? எனப் பெருமிதத்துடன் கேட்டு அத்தகையானுக்கே சிரந்தாழ்த்த விரும்புவது சிறப்பாகவுள்ளது.
      மேலும் முருகன் தாய் வயிற்றில் தோன்றினவனல்லன். சிவனருளால் தோன்றியவன். பிறதேவரெல்லாம் பெண் சம்பந்தமாகத் தோன்றியிருப்பர். இவனோ பெண் சம்பந்தமாகப் பெறப்படாத சிவன் பிள்ளை. உண்மையில் ஆண் பிள்ளை இங்ஙனம் சிவனைப் போல் ஆண்பிள்ளை பெற்றவர் யார்? அத்தகு திறனுடையான் அனைத்திலும் வல்லான். அவனுக்கே, கண்டு, கேட்டு, உண்டு, உய்த்து, உற்றறிதல் எனும் ஐம்புலவாயில் கட்டுண்ட சிரமே தாழ்த்து என்பது நயம் பயப்பதாக உள்ளது. வள்ளுவனாரும்கோவில் பொறியில் குணமிளவே எண்குணத்தான், தாளைவணங்காத்தலைஎனக் குறிப்பிடுகின்றார். ‘தலையே நீ வணங்காய்எனும் அப்பர் பெருமானின் வாக்கும் உணர்க. மேலும், சிரன் எனும் சினைப்பெயர் அதனையிடைய முதலுக்கு ஆகி வந்து என்பதும் ஒன்று. இது காயத்தால் வணங்கல் வேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.
      ‘பாடும் பணியே பணியாய் அருள்வாய்எனக் குறையிரப்பதே அடியார்களின் உள்ளம். ‘ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணங் கொட்டாமோ?’ என அவாவுகின்றது. இத்தகைய உள்ளங்களின் வழிநின்று ஆசிரியர். திருநாமங்கள் பல சொல்லுதல் வேண்டும் என்னும் வேணவாவில், நன்றெல்லாம் ஒன்றானானை, ‘திருநீலகண்டன், சிவபெருமான், பித்தன், அருளாளன், ஆண்டவன், ஆதி என்றெல்லாம் அழை; எனக் குறிப்பது வாக்கால் வணங்குவதாகின்றது. சுந்தரமூர்த்தி சுவாமிகளும், வழுக்கி வீழினும் திருப்பெயரல்லால் மற்று நான் அறியேன் மறுமாற்றம்எனவே உரைத்தார். மேலும், ‘நன்றெல்லாம் ஒன்றானான் நாடுஎனக்குறிப்பது மனத்தால் வணங்குவதாகின்றது.

நூற்பகுதி: அடியாரைச் சார்க
      ‘என்று நீ அன்று நான்என்னும் ஆற்ற்வர்கள் தொண்டர்கள். அவர்கள் தம் பெருமை சாற்றும் தரத்ததன்று. அவர்கள் பெருமையைஇறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம், தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதேஎனும் ஒளவையார் வாக்கின் வழி விரித்துகிடக்கின்றது. சுந்தமூர்த்திகளும் திருவாரூரை அடைந்தபோழ்துஎந்தை இருப்பதும் ஆரூர் எம்மையும் ஆள்வரோ கேளீர்எனும் அந்தப்பாடல் பாடி அடியார்வாயிலாகவே இறைவனை அடைய விரும்புகின்றார். இதனையெண்ணியே இவ்வாசிரியரும்அடியாரைச் சார்கஎன அறிவுறுக்கின்றார் எனக்கருதலாம். மேலும், இவர்தம் உள்ளம் அடியாரினும் அடியார் கூட்டத்தில் திளைத்திருத்தலையே விரும்புவதை,
                மனத்தால் சிவனை மறவாமல் எண்ணி
       வனத்தார் மலரைப் பறித்தேஇனத்தார்
       உடன்கூடித் தூவுவார் உள்ளன்பு உடையார்
       உடன்கூடி வாழ்வாய் உவந்து.
               
என்னும் பாடல் அங்கைக் கனியாக்குகின்றது. இங்ஙனம் அடியாருடன் கூடி மகிழ்வதை விரும்பும் ஆசிரியர் வாழையடி வாழையென வந்த அடியார் கூட்டத்தை அடையாளங் காட்டத் தவறவில்லை.
மார்பில் உருத்திராக்க மாலை மனத்தகத்தே
சேர்தல் சிவபெருமான் சிந்தனையேநேர்சடையும்
நெற்றியிலே பூசுந் திருநீறும் நேர்வாழ்வும்
உற்றவரே ஈசர்க் குறவு.

என்ற பாடலால் அடியாரது திருமேனிப் பொலிவும் மனப்பொலிவும் எடுத்துரைக்கின்றார்.
      எரியும் விளக்கிற்குத் தூண்டுகோல் தேவை. அது போலவே இறையன்புடையார்க்கும் குரு எனும் தூண்டுதல் வேண்டும். அதனால் தான்.
                கொண்ட கவலையெல்லாம் கூட்டோடே ஓட்டிடக்
       கண்ட ஒருவனை நான்கண்டு கொண்டேன்.
               
என இந்நூலில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். பெற்ற குருவினுக்குத் தொண்டனாகித் தொழும்பு செய்தலும், படைத்த குருபரனுக்கு அகமும் புறமும் உரிமையாக்கலும் இவ்வாசிரியரின் மதமாக உள்ளது என்பதைக் ‘…தொண்டன், அவனுக்கே ஆகி அகமும் புறமும் சிவனுக்கே ஆக்கிவிடல்எனும் அடிகளில் காண்கிறோம். இங்ஙனம் அடியார், அடியார் திருக்கூட்டம், குரு, குருபரன் ஆகியோர்க்கு அடியராகும் சிவன் பேசப்படுகின்றது.
நூற்பகுதி நெஞ்சிற்கறிவுரை.
      சிவபிரானுக்குரிய சிவாயநமஎன்னும் ஐந்தெழுத்து பாடிப்பரவிடப் பற்றறுக்கும் ஆற்றலது. அவ்வைந்தெழுத்து வித்து முளைத்துச் செழித்துப் பயன் கதிர் விளைவிப்பது. அப்பயனே உபாயமாவது. வேண்டுதல் வேண்டாமை இல்லாதானை அல்லும் பகலும் நினைந்து மார்க்கண்டேயரைப் போன்ற அன்பர். கூற்றத்தின் பிடியிலிருந்து விடுபட்டுக் கொல்லும் இடும்பைகள் யாண்டும் இலராயினர், ‘நமசிவாய வாழ்க’ என வாழ்த்திக் கதியெனப் பாடு கிடப்பார்க்கு அதிர வரும் வினைகள் இல்லை. குறைகள் தீரும், சீவன் சிவனாம், முத்தியுண்டாம். இவற்றையெல்லாம் அறியாமல், நிலையில்லாப் பொருளையெல்லாம் தேடித்திரிந்து அலைந்து தேசிழந்த நெஞ்சமே! படைத்தளித்தானை நீ நினையாமல் மனை, மனைவி, பொன் முதலிய தரும் பொய்ச்சுகத்தை மெய்ச்சுகமாக நிஅனைந்து அவற்றிற்கே தஞ்சம் அடைந்தாய். விஞ்சும் புகழ் சேர்க்கும் இறைவனைத்தஞ்சமடைய மறந்தாய். அதன் காரணமாக இகழ் சேர்த்தாய். சிவபெருமான் எத்தகையான் என்பதை அறியாய். சீரழிந்து போவார்க்கும் துணையவன். நம்பனென ஆடும், பாடும், அடியார்க்கு அருள் பாலிப்பவன். அவன் மேலிடும் அன்பு, பழுதெல்லாம் தீயிட்ட பஞ்சாகப் பொசுக்க வல்லது ஆதலின் இறைப்பொழுதும் மறவாது அவனை நினை என மொழிவது இனிமை பயந்து ஊற்றின்பம் தோற்றுவிப்பதாய் உள்ளது. அங்கிங்கெனாதபடி – வான், மலை, மண், காணும் ஊனகம் எனும் எப்பொருளிலும் நிறைந்து பிரகாசிக்கும் மெய்ப்பொருளை, அவரவுடைய நெஞ்சமே! அதனை நீங்கி அகக்கண் பெற்றால் காணலாம் எனப் பற்றில் செல்லும் நெஞ்சத்தைப் பற்றற்றவன் பற்றைப் பற்றும்படி மடைமாற்றம் செய்கின்றார்.
நூற்பகுதி: அடைந்தவர் பேறு
      ‘நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே’ என்றருளிய சுந்தரர் வழிநின்று இவ்வாசிரியரும் என்னுடைய தாய் பாகமே கொண்ட பசுபதியை நான் மறக்க ஆகுமோ? ஆகாது இது! என்றும், ‘குன்றுருவ வேல்வாங்கி நின்றவன் வேத முதல்வன் அப்பன் கால் தாங்கி வாழ்வாய் கதி’ என்றும் வடிக்கின்றார். மற்றும் இறைவனை எந்நாளும் மனத்தில் எழுந்தருளப் பண்ணும் வகையினையும் குறிப்பிடுகின்றார். இங்ஙனம் மறவாமையும், அவனடிக்கே கசிந்துருகலும் பணியாகக் கொண்ட அடியார்கள் தாம் அடையும் பயன்கள் யாவையெனின், பிழைகள் தலிதல், தீமைகள் வாராமை காத்தல், மனம் இன்பச்சுவையாக அவன் தாளைப்பெறுதல், காலன் அணுகாது வாழ்தல், எண்ணும் இன்பமெல்லாம் பெறுதல், வறுமை தவிர்தல், தொல்லை வினையும் இனித்தொடரும் வினையும் நீங்கல் என்பன போன்றவைகளாம் என ஆசிரியர் ஆங்காங்கு விரித்துக் கூறுகின்றார்.
புறப்பகுதி: அணி
      இதுகாறும் நூலினகத்து இடம் பெற்ற செய்திகள் நோக்கப்பெற்றன. இனி நூலின்கண் அமையப்பெற்றுள்ள அணிகளைக் காண்போம்.
      1.     ‘பூவொடு நாரும் மணம் பெறும்’ எனத் தொடங்கும் பாடலில் எடுத்துக்காடுவமை அணியும், ஏதுவணியும் அமைந்துள்ளன.
      2.     ‘மார்பில் உருத்திரக்க மாலை’ எனத் தொடங்கும் பாடலில் தன்மை அணி அமைந்துள்ளது.
      3.     ‘அறிவூட்டும் நூலை அறியாது ஒருவன், வெறியூட்டும் நூலை விரும்பி – நெறிகெட்டு அலைதலைப் போல் ஆனேன்’ என்ற அடிகளில் உவமையணி பொருந்தி வருகின்றது.
      4.     ‘நெஞ்சக் கருங்கல்லை நெக்குவிடச் செய்தாங்கே, கொஞ்சம் கரிசில் நீர் கூட்டுவித்தால்’ எனும் பாடலடிகளில் உருவக அணியைக் காணலாம்.
முடிவுரை.
      பண்டைச் சான்றோர் வழிநின்று படைக்கப்பெற்ற இச்சிறிய நூல் பன்னலங்களும் தன்னகத்தே கொண்டு இலங்குவதை நோக்கத் தொடக்கத்தில் கூறியாங்கு மணத்தால் சீரிய நூலே என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
சிவம்.