Wednesday, December 23, 2015

சிவமயம்
         சித்தாந்த சைவம்  
சித்தாந்த அசிரியர்
த. சி. ச. இராமச்சங்கு பாண்டியன்
20, தந்தி ஆபீஸ் சாலை, தூத்துக்குடி - 1
[சிவஞான பூஜா மலர் – துன்மதி ஆண்டு - (1981)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
திருச்சிற்றம்பலம்
                                அல்லும் பகலுமாய் நின்றார் தாமே
                     அந்தியுஞ் சந்தியு மானார் தாமே
              சொல்லும் பொருளெலா மானார் தாமே
                     தோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே
              பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே
                     பழனை பதியா வுடையார் தாமே
              செல்லு நெறிகாட்ட வல்லார் தாமே
                     திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

திருச்சிற்றம்பலம்.
      சற்காரிய வாதங்கொண்டு மூவித பிரமாணங்களானும் சித்திக்கும் பதி பசு பாசம் என்ற மூன்று பொருள்களும் அநாதியேயுள்ளன. இவற்றுள் பசு சுதந்திரம் இல்லாதன. பாசங்களோ சடம். பதி யொருவனே சுதந்தரி ஞானமுடையவன். எனவே முதலாவது பதிக்கும் இரண்டாவது பசுக்களுக்கும் மூன்றாவது பாசங்களுக்கும் பின்வருமாறு இலக்கணங் கூறப்படும்.
      பதியாவது அருவம் உருவம் அல்லாததாய்க் குணமுங் குறியும் இல்லாததாய் நின்மலமாய் ஒன்றாய் நித்தமாய் அசலமாய் வியாபகமாய் உயிர்கட்டு அறிவாய் ஞானசொரூபமாய் அகண்டிதமாய் ஞானத்தால்ன்றிக் கிட்டுதற்கரியதாய் ஞானத்தால் அடையப்படும் பேறாய் விளங்குவது.
      ஈண்டுக் குணமென்றது சத்துவ முதலிய முக்குணங்களை எனவே ஆகமங்கள் எண்குணத்தோன் எனக் கூறா நிற்கும். எண்குணங்களாவன சுதந்தரத்துவம், விசுத்தி தேகம், நிராமயான்மா, சர்வஞத்துவம், அநாதி போதம், அலுப்த சக்தி, அநந்த சத்தி, திருப்தி என்பனவாம். இவைமுறையே தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதால், இயற்கை உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்கல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என்று பெயர்த்துக் கூறப்படும்.
      பதி என்பது காக்கின்றவன் என்னும் பொருளது நெருப்புக்குச் சூடுபோல அவனைப் பிரிவற்றிருக்கும் சமவேத சத்தி. உயிர்கட்கு அனுக்கிரக மாத்திரங் குறித்துப் பொது வகையான அறிந்தும் அறிவித்தும் நிற்பதாகிய தடையிலா ஞானமொன்றே சிவசத்தியின் சொரூபம். அதுவே பராசத்தி எனப்படும். அந்த ஞானம் உயிர்கட்கு மலபாகம் வருதற்பொருட்டு ஐந்தொழில் செய்தலைக் குறித்துச் சிறப்பு வகையான் வியாபரிக்கும். அதன் ஒரு கூறு திரோதான சத்தி என நின்று இச்சாஞானக் கிரியை என முத்திறப்பட்டு வியாபரிக்கும்.
      இவற்றுள் இச்சையாவது உயிர்கட்கு மலத்தை நீக்கிச் சிவத்தை யளித்தற்கண் உள்ளதாகிய கருணை. ஞானமாவது மலத்தை நீக்கிச் சிவத்தையளித்தற்குச் செய்யக் கடவனவாகிய உபாயங்களை யெல்லாம் அறியும் அறிவு, கிரியையாவது உபாயங்களை அவ்வாறே சங்கற்பித்துச் செய்யும் சங்கற்பம். திரோதானமாவது மலசத்திகளின் வழிநின்று அவற்றைப் பாகம் வரும்படி நடாத்துவதாகிய சங்கற்பம். திரோதான சத்தி மலசத்திகளாகிய மோக முதலியவற்ரைத் தொழிற்படுத்துவதற்கு ஏதுவாகலின் மலமென்று உபசரித்துக் கூறப்படும்.
      பசுக்கள் அருவம் உருவம் இல்லாதனவாய்ப் பலவாய் நித்தமாய்ச் சுதந்திரமில்லனவாய் அறிவிக்க அறிவனவாய் வியாபகமாய்ச் சார்ந்த்தன் வண்ணமாய்த் திகழ்வனவாய் ஆணவ மலத்தாற்றடைப்பட்ட ஞான சொரூபமாய் விளங்குவன.
      பசு என்பது பந்திக்கப்பட்டது என்னும் பொருளது. பசுக்கள் உத்தமரான விஞ்ஞானகலர், மத்திமரான பிரளயாகலர், அதமரான சகலர் என மூவகைப்படுவர். விஞ்ஞானகலர் முதல்வன் உண்ணின்றவாறே உணர்த்த விளையும் விஞ்ஞானத்தால் கலை நீங்கும் உரிமை உடையோர். பிரளயாகலர் எல்லாமொடுங்கும் பிரளய காலத்திலே முதல்வன் தானே குருவாய் முன்னின்றுணர்த்த கலை நீங்குமுரிமை உடையோர். சகலர் கலையோடு கூடியவர். கலை என்றது பந்தம் என்னும் பொருட்டு.
      இது பற்றியே விஞ்ஞானகலர் ஆனவ மலத்தாற்றடைப்பட்ட ஞானக்கிரியை உடையவர்களாய், ஒருமலத்தராய் இருப்பவர் என்றும், பிரளயாகலர் ஞானக்கிரியைகளைத் தடுக்கும் ஆணவமலத்தையுடையவர்களாய்க் கன்ம பரிபாகத்தினாலே காலாதிகளைத் தங்கள் வசஞ் செய்து கொண்டு மோகத்துக்கு ஏதுவான கன்மத்தையும் உடையவர்களாய் இவ்வாறு ஆணவம் கன்மம் என இரு மலத்தவர்களாய் இருப்பவர்கள் என்றும் சகலர் ஞானக் கிரியைகளைத் தடுக்கும் ஆணவ மலத்தையும் அது சிறிது நீங்குதன் நிமித்தமாக மாயா காரியமாகிய காலாதிகளையும் போகத்தின் பொருட்டுக் கன்மமுமாகிய மும்மலத்தையும் உடையவர்களாய் இருப்பவர்கள் என்றும் கூறப்படும்.
      பாசம் என்பது பந்திப்பது என்னும் பொருளது. அஃது ஆணவம், கன்மம், மாயை என மூன்றாகும்.
      ஆணவமாவது ஞானதிரோதகமாய்த், திரவியமாய் அறியாமைக் குணத்ததாய்ச் செம்பிற் களிம்புபோல உயிரின் குற்றமாய், அநாதிபந்தமாய், ஒன்றேயாய், விஞ்ஞானகலர் பிரளயாகலர் சகலர் என்னும் உயிர்ப்பாகுபாட்டிற்கு ஏதுவாய், உயிர்கடோறும் தனித்தனி மறைந்து நின்று தத்தங்கால எல்லையில் நீங்குவனவாகிய சத்திகள் பல உடைத்தாய், உயிர்கள் மூன்றவத்தைகளும்படுதற்கு மூல காரணமாய், நித்தமாய், வியாபகமாய் இருப்பது.
      வியாபக உயிர் அணுத்தன்மைப் படுமாறு செய்தலில் ஆணவம் என்னும் பெயர்த்தாய்ப் பசுத்துவம், பசுநீகாரம், மிருத்தியு, மூர்ச்சை, மலம், அஞ்சனம், அவத்தை, ஆவிருதி என்றற்றொடக்கத்துக் காரணக் குறிகளும் உடைத்தாய் நிற்பது. படலம் படர்ந்த கண் ஞாயிற்றின் சந்நிதியினிற்பினும் படலத்தான் அவ்வொளியை இழந்து இருளின் அழுத்துமாறு போல முதல்வன் சந்நிதியினிற்பினுஞ் சோபான முறையானே அறிவிக்க அறியுந்தன்மைத்தான உயிர் அநாதியே அறியமாட்டாமையான் அறிவை இழந்து அறியாமையின் அழுந்துதலின் அஃதவ்வுயிர்க்குப் பந்தமாம் மூலமலம் காரிய வேறுபாட்டான் மோகம், மதம், அராகம், கவலை, தாபம், வாட்டம், விசித்திரம் என எழுவகைப்படும்.
      மூண்றவத்தைகளாவன கேவலம், சகலம், சுத்தம் என்பனவாம். அவற்றுள் ஆன்மாத் தன்னிச்சாஞானக் கிரியைகளின் நிகழ்ச்சி சிறிதுமின்றித் தன்மாத்திரையே யுளனாதால் கேவலம் எனப்படும். பின்பு தநு கரணாதிகளோடுங் கூடித் தன்னிச்சா ஞானக் கிரியைகள் ஒருபுடை விளங்கும் அவதரஞ் சகலம் எனப்படும். பின்பு பஞ்ச மலங்கலும்நீங்கிச் சிவத்தோடு கூடி அவ்விச்சா ஞானக் கிரியைகள் எங்குமாய் வியாபித்து விளங்கும் அவதரம் சுத்தம் எனப்படும்.
      கன்மமாவது மந்திர முதலிய அத்துவாக்களினிடமாக முறையானே மனோ வாக்குக் காயம் என்னும் மூன்றான் சட்டப் பட்டுத் தூல கன்மமாய் ஆகாமியம் எனப்பெயர் பெறும். பின்னர்ப் பக்குவமாங்காறும் சூக்கும கன்மமாய்ப் புத்தி தத்துவத்தினிடமாக மாயையிற் கிடந்து சாதி ஆயுள் போகம் என்னு மூன்றற்கும் ஏதுவாகி முறையே சனகம், தாரகம், போக்கியம் என மூவகைத்தாய் அபூர்வம், சஞ்சிதம் புண்னியபாவம் என்னும் பரியாயப் பெயர் பெறும். அது பின்னர்ப் பயன்படுங்கால் ஆதிகைவிகம் ஆத்தியான்மிகம் ஆதிபெளதிகம் என்னும் முத்திறத்தாற் பலதிறப்பட்டுப் பிராரதத்ம் என்னும் பெயர் பெறும். கன்மத்தின் பயன் இன்பம் துன்பம்.
      இவ்வினை, புத்தி தத்துவத்தைப் பற்றிநின்று சங்கார காலத்திற் புத்திதத்துவம் மாயையின் ஒடுங்கியவழி அம்மாயை பற்றுக்கோடாக நின்று புனருற்பவத்தில் தநு கரண முதலியவற்றிற்கு ஏதுவாய் வரும்.
      ஈட்டப்பட்ட ஆகாமியங்களுள் புண்ணிய பாவங்கட்கேற்ப முறையே துறக்க இன்பமும் நரகத் துன்பமும் அநுபவித்து எஞ்சிக் கடிப்பன சஞ்சிதங்களாம். பின்னர்ப் பக்குவ மாங்காறும் புத்தி தத்துவத்தைப் பற்றி நிற்றலின் சூக்கும கன்மம் எனப்பட்டது.
      இருவினைகள் பசுநல்வினை, தீவினை என்றும் சிவநல்வினை, தீவினை என்றும் இருவேறு வகைப்படும். அவையும் பொதுவும் சிறப்புமெனப் பகுக்கப்படும். இவை மேலும் அபுத்தி பூர்வம் புத்திபூர்வம் என்று இரு வகைப்படும். அபுத்தி பூர்வமாகச் செய்யப்படும் சிவ புண்ணியமும் பலனும் நிறைமறைக்காடு கன்னின் நீண்டெரி தீபந்தன்னைக் - கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட -  நிறைகடன் மெண்ணும் விண்ணு நீண்டவா னுலகு மெல்லாங் – குறைவறக் கொடுப்பர் என்னுந் திருநாவுக்கரசு சுவாமிகளின் வாக்கானறியப்படும். இவ்வாறே மற்றவைகளும் கண்டு கொள்ளப்படும்.
      மாயையாவது பிரபஞ்சத்திற்கு முதற்காரணமாய், நித்தமாய்ச், சடமாய், முதல்வனுக்கு பரிக்கிரக சத்தியாய் முதல்வனின் வியாப்பியமாய், மெய்ப்பொருளாய், அருவாய் உள்ளது.
      இது சுத்தமாயை அசுத்தமாயை என இருவகைப்படும். சுத்தப் பிரபஞ்சத்திற்கு முதற்காரணம் சுத்தமாயையும் அசுத்தப் பிரபஞ்சத்திற்கு முதற்காரணம் அசுத்தமாயையுமாம். துன்பத்தோடு விரவுதலின்றி இன்ப மாத்திரையே பயத்தற்கேதுவாயது சுத்தம். ஏனையது அசுத்தம்.
      மாயா காரியங்களாகிய தநு கரண முதலியவை மாயேயம் எனப்படும். இவைகளும் ஆன்மாக்களைப் பந்தப்படுத்துவன. திரோதான சக்தியும் மலமென உபசரித்துக் கூறப்படும். எனவே ஆணவம், கன்மம், மாயை, திரோதான சக்தி, மாயேயம் என்னும் ஐந்தும் பாசங்கள் என்று கூறப்படும்.
      முப்பொருளுண்மை துணியுமாறு:- இவ்வுடம்பு சடம் ஆகலான் இதன்கண் இன்பதுன்பங்களை அறிந்து நுகர்தற்கு இதனின் வேறாய் ஆன்மா என்றொரு பொருள் உண்டு. ஓர் உடம்பின் நிகழும் இன்ப துன்பங்கள் மற்றோருடம்பின் அறியப்படாமையின் உடம்புதோறும் ஆன்மாக்கள் வெவ்வேறு உண்டு. அவை இவ்வுடம்பிற் சுட்டுண்டு நிற்றற்கு மூலமாய் ஒரு பந்தம் அநாதியே உடையவாதல் வேண்டும். வேண்டவே, காரணாவத்தை மூன்று உளவாகும். நாடோறும் நனவும் கனவும் உறக்கமும் பேருறக்கமும் உயிர்ப்படங்குதலுங் காணப்படுதலான் உடம்பினும் ஐந்தவத்தைப் படும். புலன்களை உணரும் நனவிடத்து நினைப்பும் மறப்பும் முறையானே மாறி மாறி நிகழ்தலின் ஆண்டும் ஐந்தவத்தைப் படும். இவ்வான்மாக்கள் உடம்பிற் கட்டுண்டு தம் வயத்தன்வன்றி நிற்றலின் இவற்றிற்கு உடம்பு முதலியவற்றைப் படைத்து நடாத்தி ஒடுக்குதற்குப் பரமான்மா ஒருவன் உண்டு. அவன் இம்மூன்றனுள் ஒரோவொரு தொழில்செய்யும் கடவுளர்க்கு மேலாய் இவர்களையுந் தொழிற்படுத்தி நிற்பன் அவன் உலகத்தைப் படைக்குங்கால் விகாரமின்றி உடனாய் நின்று தனது சமவேத சத்தியான இருவினைகட்கேற்ப மாயை என்றொரு சடசத்தியினின்றும் தோற்றுவித்து ஒடுக்குவன். அவன் அமலனாய் நின்றே இவ்வான்மாக்களுக்கு இன்பத் துன்பங்களைக் கருவிகளின் வழியான் நுகர்விப்பன். அவன் அழிபொருள் போல சுட்டியறியப்படுவானுமன்றிப் பொய்ப் பொருள் போல அறியப்படாதவனு மன்றி வேறாயறியப்படுவன். அங்ஙனம் அறிகின்றவன் ஆன்மா. இவ்வாறு ஆகமவளவை சார்பாகத் தலை நின்று வழியளவையான் ஆராய்ந்து துணியப்படும்.
      இனிச் சிவ ஆன்ம சம்பந்தம் அத்துவிதம் எனப்படும். இவ்வத்துவிதம் அபேத சம்பந்தமாகிய ஐக்கியமின்றிப்  பேதாபேத சம்பந்தமாகிய தாதானமியமுமின்றிப் பேத சம்பந்தமாகிய சையோகமுன்றிக் கலப்பும் உடனாதலும் வேறாதலும் ஆகிய மூன்றுந் தன் கட்டோன்ற நிற்றல் பற்றி அம்மூன்றற்கும் பொதுவாகக் கூறப்படும். எனவே பொருண்மையால் பேதமென்பதும் கலப்பினால் அபேதமென்பதும், உடனாதலினால் உயிர்க்குயிராய் நிற்குமென்பதும் பெறப்படும். இச்சம்பந்தம் பெத்த காலத்தில் ஆன்மாவால் அறிந்து கொள்ள இயலாதாகலின் மெய்யுணர்வு தோன்றுங்காலத்து விளங்கித் தோன்றும்.
      முதல்வனோடு ஆன்மாவுக்கு எச்சம்பந்தம் அச்சம்பந்தம் ஆன்மாவின் வியாப்பியமான மாயைக்கும் உண்டென்றும் அங்ஙனமாயினும் சித்தென்னுஞ் சாதி யொருமையான் ஆன்மாவுக்கு விசேட உரிமை உண்னென்றும் கொள்ளப்படும். மூலமலமும் அவ்வாறு வியாப்பியமாயினும் ஒளிமுன் இருள் போல முதல்வனுக்கு மறுதலைப் பொருளாகலின் சம்பந்தமின்றாயிற்று.
      ஆன்மா அநாதியே தனக்குரிமையில்லாத மலத்தின் மறைப்புண்டு தனது சத்தி மடங்கிச் சூனியம் போற்கிடக்கு நிலை கண்டு இரங்கிப் பெருங் கருணையாளனாகிய சிவ பெருமான் சகச மல சத்திகளைக் கெடுத்து ஆன்மாக்களுக்கு மூலவினைக்கேற்ப ஆன்மாக்களைப் பிரித்து ஆடையிலுள்ள அழுக்கை நீக்கும் பொருட்டு உவர்மண்ணைச் சேர்த்து ஆடையின் அழுக்கை நீக்குமாறு போல மாயையோடு கூட்டுவன்.
      அவ்வழி அசுத்தி மாயையில் அநந்த தேவரால் கலக்குண்ட பாகமாகிய காரண சரீரத்தைப் பொருந்து அறிவிச்சை செயலகள் பொது வகையாற் சமட்டி ரூபமாய் விளங்கப் பெறும் அதன்பின் அம்மாயா தத்துவத்தினின்றும் தோன்றுங் கலாதிகளாகிய கஞ்சுக சரீரத்தைப் பொருந்தி அவை வியட்டி ரூபமாய்ப் பிரிந்து தோன்றிச் சிறப்பு வகையான் விளங்கப் பெறும். அதன்பின் அந்தக்கரண முதலியவற்றைத் தம்முள் அடக்கி நிற்கும் குணசரீரத்தைப் பொருந்தி அறிவிச்சை செயல்கள் வரும் விடயங்களின் வியாபரிக்கப் பெறும். அதன் பின் சூக்கும சரீரத்தைப் பொருந்திப் போக்குவரவு செய்து சூக்குமவினைப் பயன்களை ஈட்டுதலும் நுகர்தலுஞ் செய்யும். பின் தூல சரீரத்தைப் பொருந்திப் போக்குவரவு செய்து தூலவினைப் பயன்களை ஈட்டுதலும் நுகர்தலுஞ் செய்யும். இவ்வைந்தும் முறையே ஆனந்த மயகோசம் விஞ்ஞான மயகோசம், மோனமய கோசம், பிராணமய கோசம், அன்னமய கோசம் எனவும் பெயர் பெறும்.
      இவ்வாறு தநு கரணாதிகளோடுங்கூடி உருவினைக் கொண்டும், இச்சையுற்றும், நால்வகை வாக்குக்களாண் நிகழும் அறிவுற்றும், வரப்பட்ட தொழில்கள் உற்றும், சத்தமாகி விடயத்தில் விருப்புற்றும், இருவினைகளைப் புரிந்தும், தோற்றக் கேடுகளிற் புக்குழன்றும், ஏகதேசியாய், சுவர்க்க நரக பூதலங்கலில் சுழற்சியுடையனாய் இருப்பன்.
      இங்ஙனந் தன்வயனெனக் கொண்டு தேகாதிகளே தானென் விசாரித்து புறச்சமய நெறி நின்று செய்த புண்ணியங்களான் அகச்சமயம் புக்கும், புகன் மிருதி வழியுழன்றும், புகலு மாச்சிரம அறத்துறைகளவையடைந்தும், அருந்தவங்கள் புரிந்தும், அருங்கலைகள் பல தெரிந்தும், ஆரணங்கள் படித்தும், சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும், வேதசிரப் பொருளை மிகத் தெளிந்துஞ் சென்றால் முடிவில் சித்தாந்த சைவத்தை அடைவர்.
      இவ்வாறு பல்வேறு பிறவிகளின் ஈட்டப்பட்ட அபுத்தி பூர்வம் புத்திபூர்வம் என்னும் பொதுச் சிவபுண்ணியத்தான் ஆன்மா பக்குவமடையும், அதனான் பசு நல்வினை தீவினைகள் தம்முள் ஒத்தலாகிய இருவினையொப்பு நிகழும். அவ்வழி மலபரிபாகத்தை தோற்றுவிக்கு முகத்தான் மந்ததரத்துள் மந்ததரமாகிய முதலாஞ் சத்திநிபாதம் நிகழும்.
      பக்குவமாவது ஆசாரியன் அறிவித்தவாறே அறியவல்லுஞ் செவ்வித்தாதல். இருவினையொப்பாவது ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்புமாதலின்றப் புண்ணியப் பாவமிரண்டினும் அவற்றின் பயன்களினும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து விடுவோனது அறிவின் கண் அவ்வாறொப்ப நிகழ்தல், மலபரிபாகமாவது மலந்தனது சத்தி தேய்தற்குரிய துணைக் காரணங்கள் எல்லாவற்றோடுங் கூடிப் பதனழியுஞ் செவ்வித்தாதல்.
      சத்திநிபாதம் என்பது சத்தியின் வீழ்ச்சி என்னும் பொருடு, உலகத் துழனியின் அச்சம் நிகழ்ந்து அவ்வுலக வாழ்க்கையினின்று வெருவிப் போந்து உண்மைக் குரவனை நாடிச் செல்லுமாறு செய்வித்தலின் சத்திபாதம் எனப்பட்டது.
      சத்திநிபாதமும் மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நால்வகைப்பட்டு மேலும் பலவேறு வகைப்பட விரியும். மந்ததரத்தாற் சாதக நிலையும், மந்தத்தாற் சீவன் முத்தி நிலையும், தீரிவரத்தான் அபரமுத்தி நிலையும், தீவிர தரத்தான் பரமுத்தி நிலையும் பயக்கும்.
      முதல்வன் வியாபகமாய் நின்றவாறே விளக்கினும் ஆன்மாக்களின் அறிவு தூலமாகலான் அவ்வாறு விளங்க மாட்டாது தத்தமக்கேற்ற சோபான முறையே சிறிது சிறிதாக ஏகதேசமாய் விளங்கி விளங்கி மேம்பட்டு வந்தே வியாபகமாய் விளங்குவதோர் இயல்பிற்றாகலான், அத்தன்மை நோக்கி அதற்கேற்பச் சோபான முறையாய்த் தானேமுதல்வனது சிற்சத்தியும் முற்பக்கத்துத் (வளர்பிறை) திங்கள் போலத் திரோதான சத்தி ரூபமாய் நின்றறிவிக்கும். ஆன்மாக்களின் அறிவு அங்ஙனம் விளங்காதபடி நிகழும் அறியாமையாகிய மலமும் பலபல சக்திகளுடையதாய் அம்முறையே முற்பக்கத்து இருள் போலக் கீழ்பட்டுத் தேய்ந்து தேய்ந்து முடிவின்கட் பற்றறக் கழியும். அது தேயத் தேய அதற்கேற்பத் திரோதான சத்தியும் அம்முறையே சிறிது சிறிதாகத் தன் தன்மை நீங்கிச் சிற்சத்தி ரூபமாய் பதிந்து பதிந்து முடிவின் கண் அதி தீவிர சத்தியாய்ப் பதியும். அது பதிய பதிய விடய வெறுப்புண்டாகும். அஃதுண்டாக உண்டாக அம்முறையே வீட்டின் கண் விருப்பம் நிகழும். அது நிகழ நிகழ அதற்கேற்ப ஆண்டாண்டுப் பலவேறு வகைப்பட உபதேசங்கள் சோபான முறையான் மேற்பட்டு உளவாகும். அதற்கேற்ப ஆன்மாவின் அநுபவ ஞானங்களும் அவ்வாறு மேற்படும்.
      இவ்வாறு பக்குவம் பார்த்து உண்ணின்றுணர்த்திய பரம்பொருளே குருவடிவாய் எழுந்தருளி வந்து சிவதீக்கை செய்து உபதேசமுகத்தானும் நூன்முகத்தானும் அநுபவ முகத்தானும் உணரும்படி செய்வன். ஆசிரியன் காட்டிஞ் சைவாகம நெறியிற் சமய தீக்கையுற்றுச் சரியை நெறியைத் தலைப்பட்டு அது முற்றிய பின்னர் விசேட தீக்கையுற்றுக் கிரியை நெறியைத் தலைப்பட்டு அது முற்றிய பின்னர் யோக நூல் கேட்டு யோக நெறியைத் தலைப்பட்டு இம்மூன்றும் முறையான் முற்றிய பின்னர் நிர்வாண தீக்கை பெற்று ஞான நெறியைத் தலைப்பட்டு இவ்வாறு படிவழிச் சென்று சென்றேறி ஞானத்தாற் சிவனடியைச் சேர்வன்.
      சமய விசேடங்களை அங்கமாகக் கொண்ட நிர்வாண தீக்கையானது இறைவனது கிரியா சத்தி விருத்தி ரூபமாகும். சிவாகமங்களின் உண்மைப் பொருள் ஆராய்ச்சிக்கு அதிகாரம் அளிப்பது. அத்துவ சுத்தியின் வாயிலாக அத்துவாக்களின் நிரம்பிக் கிடந்த சஞ்சித கன்மங்களை வறுத்த வித்துப்போலாக்குவது. அதனானே ஆன்மாவை ஞானத்திற்கு உரியன் ஆக்குவது.
      ஞானமாவது புறக் தொழில் அகத் தொழில் இரண்டுமின்றி அறிவுத் தொழின் மாத்திரையானே அம்மூன்று திருமேனிக்கும் மேலாய் அகண்டாகார நித்த வியாபகச் சச்சிதானந்தப் பிழம்பாய் நிறைந்து நின்ற சிவபிரானிடத்திற் செய்யும் வழிபாடு ஆகும்.
      ஞானமும் சரியை கிரியை யோகம் ஞானம் என நான்கு வகைப்படும். அறிதலொப்புமையால் நான்கும் ஞானமேயாம். ஆயினும் அரும்பு மலர் காய் கனியாதல் போலச் சோபான முறையாகிய தம்முள் வேறுபாட்டான் முறையே ஒன்றற்கொன்று அதிகமாய் நான் காமெண்ணுக்கணின்ற ஞானமே முடிவாகிய ஞான நாம். இந்நான்கினும் அறிவு நுணுகி வர வர அறியாமையாகிய மலமும் அம்முறையே தேய்ந்து தேய்ந்து வரும். இவற்றின் பயனாகிய சாலோக முதலிய நான்கும் முத்தியேயாயினும் ஒன்றற்கொன்று ஏற்றமாய் இறுதிக்கணின்ற சாயுச்சியம் ஒன்றே முடிவாகிய முத்தியாகும்.
      மேற்கூறப்பெற்ற நான்கும் கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டை எனவும் பெயர் பெறும். ஞான நூல்களை ஞானசிரியன் பால் ஓதல் கேட்டல் பிறர்க்கு ஓதுவித்தல் கேட்பித்தல் என்பன கேட்டலாகும். தானும் உடனாயவரோடும் அப்பொருளைச் சிந்திப்பது சிந்தித்தலாம். இவ்வாறு கேட்ட காலத்து முதல்வனியல்பு பொருட்டன்மை பற்றிப் பேதமாய்த் தோன்றிச் சிந்தித்தகாலத்து அபேதமாய்த் தோன்றும். இவ்விரண்டுமின்றி நேரியனும் பரியனுமாயதோர் முறைமை பற்றி எவற்றினும் ஒற்றித்து நின்றே ஒன்றினும் பற்றிலனாய் வேறு தோன்றுவது தெளிதலாம். இவ்வாறு அவனோடு ஏகனாகி நிற்க ஏகதேசச் செலவு இன்றாய் ஒழியும். நிட்டையாவது கரணங்களின் வயத்தனாதலின்றி மேலங்ஙனந் தோன்றிய இறைவனது வியாபகத்தைத் தலைப்பட்டு ஒருவாற்றுனுங் குறைவின்றி இம்மையே சிவன்முத்தனாகி மாசுநீங்கிய வழி ஆடையின் வெண்மை ஆடை முழுதும் விளங்கினாற் போல, இங்குளி வாங்குங் கலம் போலுழல்வதாகிய இவ்விடம்பு நீங்கப் பெறும் பரமுத்தி நிலையில், வியாபகமெங்ஙனும் அறிவு விளங்கப் பெற்று முதல்வனோடு ஒத்து நிற்பன் என்பதாம்.
      இவ்வாறு இருவினையொப்பால் சத்தமாதி விடயத் தன்னியன் பற்று நீங்கும். சத்திநிபாதத்தால் போக போக்கியக் கருவிகளின் செறிவு கழியும். குருவருளால் உருக்கழியும், தீக்கையால் சஞ்சித வினை கழியும். ஞான சாதனத்தால் எல்லா யோனிகளிலும் புக்குழல்தல் கழியும். ஞானப் பெருக்கத்தால் பாச அறிவிச்சை செயல்கள் கழியும். இறைவனது ஞான சத்தியால் அநாதி மறைப்பாகிய ஆணவமலமும் வாதனைபற்றி நிகழும் ஆகாமிய வினையும் ஒழியும். கிரியா சத்தியான சஞ்சித வினைக்குப் பற்றுக்கொடுத்து நிற்கும் முன்னிலையாகிய மாயேய மலமும் ஒழியும். உடம்பு முகந்து கொண்ட பிராரத்த கன்மம் அநுபவத்தால் ஒழியும். மும்மல நீக்கத்தால் ஏக தேசத் தன்மை கழியும். வாதனை நீக்கத்தால் விடயந் தன்னியன் நுகர்வது கழியும்.
      இவ்வாறு சகல உபாதிகளும் கழிந்து சிவஞானம் வினங்கப் பெற்று மாணிக்கத்தைச் சார்ந்த படிகம் மாணிக்கமாய் ஒழியாது, மாணிக்கத்தின் ஒளியும் நிறமும் பெற்றுத் தன் ஒளி அதுவதுவாயடங்கி அம்மாணிக்கத்திற்குச் சமமாய் நிற்குமாறு போலப் பரமான்மாவினுடைய என் குணங்களுமே தன் குணமாகக் கொண்டு தன் குணம் அவையேயாயடங்கிப் பரமான்மாவே போல ஒற்றித்து நின்று அப்பரமான்வே தனக்கு விடயமாக அயராவன்பு செய்து சிவாநந்த அநுபவம் பெற்று அந்நிலையிலும் மீளா அடிமையே என்று திருவருள் கண்ணாகத் (தன்முனைப்பின்றி) அநுபூதியிற் காண்பன்.
சிவம்.

     


No comments:

Post a Comment