Tuesday, December 22, 2015

சிவானுக்ரஹம்
தர்மபிரவசன ரத்னம், உத்தம உபன்யாச சக்கரவர்த்தி பிரம்மஶ்ரீ மஞ்சக்குடி
K. ராஜகோபால சாஸ்திரிகள்
 [சிவஞான பூஜா மலர் – துன்மதி ஆண்டு - (1981)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
      மஹாபாரதம் என்று அழைக்கப்படும் நம் பாரத நாட்டின் சிறப்புக்களைக் கூறுவதும் நான்கு வேதப் பொருள்களுடன் உள்ளதுமான அரும் பெரும் பிரமாண நூலில், பஞ்ச பாண்டவர்கள் யாவர்? திரெளபதி என்ற பெண் யார்? இவர்கள் எப்படி மணந்து கொண்டார்கள்? இது எந்தப் பண்பாட்டிலும் பொருந்தாத ஐவரை ஒரு பெண் மணப்பது என்பது எப்படிப் பொருந்தும் என்ற பல கேள்விகளைக் கேட்டு விடை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டும் இன்னும் நல்லதொரு விடையைத் தெரிந்து மனத் தெளிவு ஏற்பட்டு ஈச்வரானுக்ரஹம் எத்தகையது என்றெல்லாம் புரிந்து கொள்ளாத நிலையை எங்கும் காண்கிறோம். மஹாபாரதம் தான் நம்நாட்டின் பாரத வம்சத்தின் உயிர் ஓவியமான உத்தமர்களின் நாகரீகத்தையும் ஆன்மீகத் துறையையும் காத்து வருகின்றது. எனவே மஹாபாரதத்தில் உள்ள நாகரீகம் வேறு எங்கும் காண்க கிடைக்காது.
      அந்த மஹத் கிரந்தத்தில் ஒரு பெண் ஐவரை மணக்க அருள் பாலித்த முறையையும், அது என்றென்றும் போற்றிப்படும் வகையிலும் அமைந்ததும், அந்த நூலின் பெருமைக்கே காரணமானதுமாக உள்ளது சிவபெருமானின் திருவருள் தான். அதை எந்த முறையில் சொன்னால் எல்லோரும் இன்புறுவார்களோ அப்படி வியாஸர் பெருமானார் கூறும் அழகைப் பார்ப்போம்.
      துருபத மஹாராஜவுக்கு திரெளபதியை ஐவருக்குக் கொடுக்க இஷ்டமில்லை. முடியாது என்றும், ஐவரில் ஒருவர் யார் வேணுமானாலும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் முடிவாகச் சொல்லி விட்டான். பாண்டவர்கள் ஐவரும் எங்கள் தாயார் (ஐவரும் அடைய வேணும் என்று) கட்டளை இட்டபடியால் தாயின் கட்டளையை மீற முடியாது என்று கூறி விட்டார்கள்.
      இனி என் செய்வது? இது ஸமயம் ஒன்றும் புரியாமல் தவிக்கும் தருணத்தில் வியாஸர் பெருமான் வந்தார். அவரிடம் இருவர் கக்‌ஷியும் சொல்லப்பட்டது. எல்லோர் மனத்தையும் அறிந்து வியாஸர் முந்திய ஜன்ம காரணத்தை கூறும் கதை போல் சிவகிருபையை வெளியிட்டார்.
      நளாயனீ என்ற மஹா பதிவ்ருதை, தனது கணவனார் மெளத்கல்ய முனிவரின் இஷ்டப்படி, தவம் செய்யச் சென்றாள். சிவபெருமானைக் குறித்து உக்ரமாகத் தவம் செய்தாள்.
                      தீவ்ரேண தபஸா தஸ்யா: துஷ்ட: பசுபதி: ஸ்வயம்
              வரம் ப்ராதாத் ததா ருத்ர: ஸர்வலோகேச்வர: ப்ரபு:
              பவிஷ்யதி பரம் ஜன்ம பவிஷ்யதி வராங்கனா
              பவிஷ்யந்தி பரம் பத்ரே பதய: பஞ்ச விச்ருதா:
     
      சிவபெருமான் அந்தப்பெண்ணின் உக்ரமான தவத்தை மெச்சி பிரத்யக்ஷமாகி வரம் கொடுத்து அருளினார். பெண்ணே! உனக்கு வேறு ஜன்மா விசேஷமாக உண்டாகி ஸர்வாங்க ஸுந்தரியாகி ஐந்து மஹா புருஷர்களைக் கணவர்களாக அடைவாய் என்று அருளிச் செய்தார்.
      நளாயனீ:- சம்போ! இது தகாதது, ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் தானே, இது தான் உலக தர்மம்.
            ஏக: கலுமயா பர்த்தா வ்ருத: பஞ்சஸ்த்விமே கதம்
      நான் ஒரு பர்த்தாவைத் தானே ஏற்றுக்கொள்ள வேணும். ஐவரை ஏற்பது எப்படி? இது பொருத்தமற்றதும் கூட இது போன்ற வரம் பகவானே கொடுக்கலாமா? என்றாள்.
      பரமேச்வரன்:- பெண்ணே!
                                பஞ்சக்ருத்வ: த்வயாப்ரோக்த: பதிம் தேஹீத்யஹம்புன:
              பஞ்சதே பதயோ பத்ரே பவிஷ்யந்தி ஸுகாவஹா:
              ஸக்ருதுக்தம் த்வயா நைதத் நாதர்மஸ்தே பவிஷ்யதி.

      நீ ஐந்து முறை பதி வேணும் என்று என்னை வரனாகக் கேட்டாய். நன் ஐந்து பதிகளை கொடுத்தேன். ஒரு தடவை கேட்டிருந்தால் ஒருவரைக் கொடுத்திருப்பேன். இதனால் குற்றமில்லை. நான் கொடுத்திருக்கிறபடியால் இதில் அதர்மம் வராதது மட்டுமல்லாது நீ போற்றவும்படுவாய் என்றார். மேலும் ஒவ்வொரு கணவரிடமும் இருந்து பிறகு பால்யத்தையே அடைவாய்.
                                பஞ்சபி: ப்ராப்ய கெளமாரம் மஹா பாகா பவிஷ்யஸி
              கச்ச கங்காஜலஸ்தாச நரம் பச்யஸிதம் சுபே.
     
இனி கங்கைக் கரைக்கு போய் அங்கு ஒருவர் வருவார். அவரைப் பார்த்து என்னிடம் அழைத்து வா. நீ தான் இனி ராஜ்யலக்‌ஷ்மீ, தேவ ஸாம்ராஜ்யலக்‌ஷ்மீ, தேலோக அதிபர்களைக் கணவர்களாக அடைவாய் என்று அருள்பாலித்து மறைந்தார்.
      நளாயனியை மெளத்கல்ய முனிவர் விரக்தியை அடைந்து தவம் செய்யப்போகும் போது சிவபக்தி செய்து வேறு ஜன்மாவில் வேறு கணவரை அடைவாய் என்று சொல்லி இருப்பதால் நளாயனி சிவபெருமானை பதிம்தேஹி என்று ஐந்து முறை கேட்டாள். சிவபெருமானும் அப்படியே அருளினார்.
      இப்போது கங்கையை அடைந்து நளாயனி வருத்தத்துடன் ஒரு சொட்டு ஜலத்தை கங்கையில் கண்ணிலிருந்து விட்டாள். அது தாமரஸ புஷ்பமானது, இதைப் பார்த்துக் கொண்டே வந்த இந்திரன் நளாயனியிடம் நீ யார் அம்மா என்று கேட்டான். அப்போது நளாயனி அவனிடம் ஏதுவும் பேசாமல் என்னுடன் வாவென்று அழைத்தாள். இந்திரன் அந்தப் பெண்ணுடன் கூடச் செல்ல
                தாம்கச்சந்தீமன்வகச்சத் ததானீம் ஸோபச்யதாராத் தருணம் தர்சனீயம்
       ஸித்தாஸனஸ்தம் யுவதீஸஹாயம் க்ரீந்தமைக்‌ஷத் கிரிராஜமூர்தனி

அந்தப் பெண் கைலாஸ சிகரத்தை அடைந்தாள், அங்கு பார்வதியுடன் சொக்கட்டான் ஆடிக் கொண்டு ஸித்தாஸனத்தில் இருக்கும் பரமேச்வரனை இந்திரன் பார்த்தான். கோபம் கொண்டான். நீர் யார்? நான் இந்திரன் இவ்விடம் வந்திருக்கிறேன். தேவ ராஜனாகிய என்னைக் கண்டதும் எழுந்து மரியாதை செய்யவில்லை. உன்னை தண்டிப்பேன் என்று உரக்கச் சப்தமிட்டான்.
                க்ருத்தம்சசக்ரம் ப்ரஸமீக்‌ஷ்யதேவ: ஜஹாஸக்ரம்ச சனைருதைக்‌ஷத
       ஸம்ஸ்தம்பிதோ பூதததேவராஜ: தேநேக்‌ஷித: ஸ்தாணுரிவாதஸ்தே

அந்த இந்திரன் கோபப்படுவதைக் கண்ட பகவான் ஹா ஹா என்று சிரித்து அவனை ஒருமுறை பார்த்தார். இந்திரன் கை கால்கள் அசைவற்றன. வாய் பேச முடியவில்லை, கண் அசைவற்றது, எதையும் செய்ய முடியாமல் தவித்தான். எந்த பரமேச்வரன் கிருபையால் கை அசைகிறதோ, கால் நடக்கிறதோ, கண் பார்க்கிறதோ, வாய் பேசுகிறதோ, காதுகேட்கிறதோ மூக்கு முகர்கிறதோ, மற்ற அவயங்களும் செயல்படுகிறதோ, அவரை வணங்காவிடில் எந்த அவயமும் செயல்படாது என்றதை அவன் அறிய வேண்டியே நடத்திக்காட்டினார். உடன் பகவான் அந்தப் பெண்ணைப் பார்த்து இவனை அழைத்துச் செல் என்றார். அந்தப் பெண் அவனைத் தொட்டதும் திடீரென்று கீழே விழுந்தான். ஸ்வாதீனமற்றவனானான். அவனைப் பார்த்து கிரீசன்.
                                தரீமேநாம் ப்ரவிசத்வம் சதக்ரதோ யன்மாம் பால்யாத்
   அவமம்ஸ்தா: புரஸ்தாத்

இந்தக் குகைக்குள் போ, உனக்கு விசேஷ ஞானமில்லாததினால் என்னைல் கண்டதும் அவமதித்தாய். ஏமாந்து போனாய், போ குஹைக்குள், உன்னைப் போல் முன் இந்திரனாக இருந்தவர்கள் நால்வர்கள். அவர்களும் என்னை நீ செய்ததுபோல அவமதித்தார்கள். அவர்களை இந்தகுகையில் அடைத்து வைத்திருக்கிறேன், நீயும் போய் இரு என்றார்.
      இந்திரன் நடுங்கி சிவ கிருபையால் ஸ்வாதீனம் அடைந்து அழுது புலம்பி, என் அப்பனே சம்போ! உனது பெருமையை தெரிந்து கொள்ளாமல் போனேன். நீங்கள் இந்த உலகத்தை படைத்து ரக்‌ஷித்து அழிக்கும் முழுமுதற் கடவுள். உங்களை சரண் அடைகிறேன் என்றான்.
உவாசதேவம் பஹுருபமுக்ர ஸ்ரஷ்டாசேஷஸ்ய புவனஸ்ய த்வம்பவாத்ய:
     
நீங்களே எல்லாவற்றிற்கும் காரணமானவர் என்று துதித்தான். இந்த இந்திரன் குகைக்குள் சென்றான். அங்கு முன் இந்திரர்களாக நால்வர் இருந்தவர்கள் இருந்தார்கள். சிவபெருமான் அவர்களையும் இப்போது வந்து இந்திரனையும் பார்த்து மனுஷ்யலோகம் செல்லுங்கள். இந்தப் பெண்ணை நீங்கள் ஐவரும் மணந்து உலகில் உள்ள தீய சக்திகளைப் போக்கிய உலகை உங்களால் நல்வழிப்படுத்தின. பிறகு உங்களுக்கு என்னை அவமதித்த சாபம் போகும். பிறகு இவள் ஸ்வர்கக்‌ஷ்மியாவாள், நீங்கள் தேவபதம் பெறலாம் என்று அருளிச்செய்தார். அந்த ஐவர்கள் விச்வபுக்-பூததாம-சிபி-சாந்தி-இந்திரன் ஆக ஐவர். இந்த ஐவரும் சிவகிருபையினால் தர்ம தேவதை வாயு-இந்திரன்-அச்வனீ தேவர்களின் ப்ரசாதத்தினால் இவ்வுலகை அடைந்து, உலகைக்காக்க வந்தவர்கள், சிவபெருமான் அருள் பெற்றவர்கள். அதனாலேயே திருமாலும் இவர்களுக்கு ஸஹாயம் செய்ய ‘பலராம கிருஷ்ணர்களாக’ பிறந்திருக்கிறார்கள். நீ கவலைப்படவேண்டாம். இது சிவானுக்ரஹம், இவர்கள் தான் இந்த பாரதம். பாரத உலகு தான் இவர்கள் என்று வ்யாஸர் தெளிவு படுத்தி ஞானதிருஷ்டியையும் கொடுத்து ஐவர்களையும் பார்க்கச் செய்தார். துருபதமஹாராஜனும் வியாஸரின் உபதேசத்தினாலௌம் ஞானக்கண்ணாலும் பாண்டவர்களையும், திரெளபதியையும் பார்த்து சிவகிருபை பெற்றவர்கள் என உணர்ந்து சிவாக்ஞைப்படி கன்யகாதானம் ஐவருக்கும் ஐந்து நாள்களில் தனித்தனி செய்தான் ஐவருக் ஒவ்வொரு நாளும் திருமணம் செய்து கொள்ளவும் போது திரெளபதி கன்னியாகவே இருக்கக் கண்டார்கள். எல்லாம் சிவமயம், பாரதக்கதை என்ற இதிஹாஸத்தின் முக்கியமான கட்டமான ஐவரை மணந்த்து சிவகிருபைதான் காரணம் என்று தெளித்தோம்.
சிவப்ரஸாதத்தினால் தான் உலகு வாழும்.


No comments:

Post a Comment